ஆறிப் போன காபி, தேநீர் போன்றவற்றை மீண்டும் சுட வைத்துக் குடிப்பது, சூடான நீரை பாலிதீன் கவர்களில் ஊற்றிக் குலுக்கிப் பாலுடன் கலப்பது, உலோகப் பாத்திரத்தை அடுப்பிலேற்றி சூடாக்குவது, ரப்பர், டயர், பிளாஸ்டிக் ஆகியவற்றைக் கொளுத்துவது, ஆஸ்பெஸ்டாஸ் கூரையின் கீழ் வாழ்வது போன்றவை புற்றுநோயை உண்டாக்கக் கூடியவை என்று அறுதியிட்டுச் சொல்கிறார்கள், நவீன ஆராய்ச்சியாளர்கள். அதே போல புராதன ஆயுர்வேத நூல்களில் புற்றுநோய்க்கான காரணிகள் பட்டியலிடப்பட்டுள்ளனவா? அஷ்டாங்க சங்கிரகம் எனும் ஆயுர்வேத நூல் மட்டமான உணவுவகைகளைப் பட்டியலிடும்போது "உஷ்ணீ க்ருதம் புன:' என்று நடுவில் குறிப்பிடுகிறது. அதாவது எந்த ஓர் உணவுப் பண்டத்தையும் மறுபடியும் சூடு செய்வது, மட்டமான உணவாகும் என்று அதற்கு அர்த்தமாகும். உணவைச் சமைத்த ஒன்றரை மணி நேரத்திற்குள் அதன் சூடு சுமாரான நிலையில் இருக்கும்போதே, உண்பவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். எத்தனை பேருக்கு இந்த அதிர்ஷ்டம் கிடைக்கிறதோ? உணவைச் சீரணிக்கச் செய்பவை ஆறு: 1. ஊஷ்மா - உடற்சூடு, 2. வாயு - வாதம், 3. க்லேதம் - பிசுபிசுப்பு - நீர்ப்பதம் - ஈரப்பசை, 4. ஸ்நேகம் - எண்ணெய்ப்பசை, 5. ...