இந்தியாவின் சோகம் வறுமையல்ல. வறுமையை ஏற்றுச் சகித்துக்கொண்டு வாழும் ஏழை மக்களே!!!
உலகில் நாகரிகம் தொடங்கிய காலத்திலிருந்தே ஏழ்மை ஒரு விவாதப் பொருளாக உள்ளது. கி.மு. 5-ம் நூற்றாண்டில் ப்ளாட்டோ ""அதிகமான ஏழ்மையும், அதிகமான பணபலமும் மக்களிடம் காணப்பட்டால் அது தீங்கு விளைவிக்கும்'' என்றார். ""ஏற்கெனவே வசதி படைத்தவர்கள் மேலும் வசதியைப் பெருக்கிக் கொள்வதை முன்னேற்றம் எனக் கருத முடியாது. வசதியில்லாதவர்களுக்கு வசதி ஏற்படுத்திக் கொடுப்பதே முன்னேற்றம்'' என 1937-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஃப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட் கூறினார். ஏழைகளின் வாழ்க்கைத் தரம் பற்றி பேசாத தலைவர்களே கிடையாது என்றபோதிலும் ஏழ்மை என்றால் என்ன என்பதை வரையறுப்பது மிக முக்கியமான ஒரு கடமையாகிறது. காரணம், இந்தியா போன்ற ஒரு நாட்டில் பல லட்சம் கோடி ரூபாய்கள் ஏழ்மை மற்றும் வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்குச் செலவிடப்படுகிற காரணத்தால் அவை சரியானவர்களுக்குத்தான் போய்ச் சேருகின்றனவா எனும் கேள்வி எழுகிறது. அதனால்தான் ஏழ்மை என்றால் என்ன, ஏழைகள் யார் எனும் கேள்வி மிக முக்கியமானது ஆகிறது. ஏழ்மை பற்றி உலக அறிஞர்கள் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முதல் ஆராய்ச்சியை 1901-ம் ஆண்டு சீபாம் ரவுண்டிரி எனும்...